SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Post Traumatic Stress Disorder Homeo Treatment & Counseling
September 17th, 2015 by Dr.Senthil Kumar

 

PTSD, Depression manakavalai, mana alutham neurosis treatment counelsing specialsit dr.sendhil kumar vivekananda clinic velachery, chennai, panruti, cuddalore, pondycherry, tamilnadu

Post Traumatic Stress Disorder

அதிர்ச்சியின் பின்விளைவாக அமையும் மனஇறுக்க குறைபாடு

 

அதிர்ச்சியின் பின்விளைவாக அமையும் மனஇறுக்கக் கோளாறு என்பது என்ன?

மனித வாழ்க்கையில் அதிர்ச்சியையும் பேரழிவையும் ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. சிலர் பூகம்பம், வெள்ளம், போர் போன்றவற்றின் மூலம் உறவினர்களையோ நண்பர்களையோ பக்கத்து வீட்டுக்காரரையோ இழக்க வேண்டி இருக்கலாம். வேறு சிலர் கற்பழிப்பு, வழிப்பறி, வீட்டுக்குள் நடக்கும் வன்முறை, ஆள்கடத்தல், வாகன விபத்து போன்ற ஏதாவதொரு அதிர்ச்சிகரமான சம்பவத்துக்கு நேரடியாக ஆளாகியிருக்கலாம்; குழந்தைகள் அல்லது சிறுமிகைளைப் பொருத்தவரை, அவர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கலாம்.

 

அதிர்ச்சிகரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர், அதன் தொடர்பாகக் கடுமையான மன இறுக்கத்துக்கு (Stress) ஆளாகிறார். பெரும்பாலான நேரத்தில், இந்த மன இறுக்கம் என்பது அதீதமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் இயல்பான எதிர்விளைவாகும். சம்பவம் நிகழ்ந்தவுடன் அல்லது சில வாரங்களோ மாதங்களோ கழித்துகூட இந்த உணர்வுபூர்வமான அதிர்ச்சி வெளிப்படலாம். பாதிக்கப்பட்ட சம்பவத்தின் கடுமையையும் காலத்தையும் பொருத்து அதிர்ச்சியின் அறிகுறிகள் வேறுபடலாம்.

 

சராசரி வாழ்க்கையை மீண்டும் வாழ முடியாத அளவுக்குச் சிலரை இந்த அதிர்ச்சிகள் கடுமையாகப் பாதித்துவிடுகின்றன. அதன் காரணமாக, இவர்களை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ அல்லது பைத்தியக்காரன் என்றோ நாம் கூறிவிட முடியாது. மருத்துவ உதவியின்றி குணப்படுத்த முடியாது என்கிற அளவுக்குக் கடுமையான அதிர்ச்சியால், அந்த நபர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

 

அதிர்ச்சிகரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே மருத்துவ சிகிச்சை என்பது தேவையில்லை. இதில் சிலர் நண்பர்கள், உறவினர்கள் அல்லது மதபோதகர்கள் போன்றோரின் உதவியால் மீண்டுவிடுகின்றனர். மற்றவர்கள் இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வெளியே வர மருத்துவ உதவி கட்டாயம் தேவைப்படுகிறது. இவர்கள் அதிர்ச்சிக்குப் பின்விளைவாக அமையும் மன இறுக்கக் கோளாறுகளுக்கு உள்ளாகிறார்கள். இவர்களுக்காக மனநல மருத்துவரின் உதவியை நாடுவதைப் பற்றி கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.

 

மன இறுக்கத்துக்கான அறிகுறிகளும் அதைக் கண்டறிதலும்

அதிர்ச்சிகரமான சம்பவத்தின் தொடர்ச்சியாக ஒருவருக்கு ஏற்படும் பலவீனம் மன இறுக்கக் கோளாறு ஆகும். அதன் அறிகுறிகள் ஒருவரிடம் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ காணப்படலாம். உதாரணத்திற்கு, பாதிக்கப்பட்டவர் ஒரு சதாரண விஷயத்திற்கு எளிதாக எரிச்சல்படலாம் அல்லது நேர்மாறாகக் கடுமையாகக் கொதிப்படையலாம். பல நேரங்களில், இப்படிப்பட்டவர் எந்த ஒரு இடத்திலும் பணிபுரிய முடியாது; எளிதாகச் சமூகத்தோடு ஒட்டி உறவாட முடியாது

 

ஒருவர் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால் நேடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருக்கலாம்; பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது அவருடைய உறவினருக்கோ காயம் ஏற்பட்டு இருக்கலாம்; நெருக்கமானவரை இழந்திருக்கலாம் பாதிக்கப்பட்டவரின் ஆளுமைக்குப் பங்கம் நேர்ந்திருக்கலாம். இந்த நிகழ்வுகளே ஒருவர் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதற்கான முதல் கூறாக அமைகிறது. இத்தகைய அதிர்ச்சிகளைச் சந்தித்தவர் கடுமையான பயத்திற்கும் உதவியற்ற நிலைக்கும் பீதிக்கும் உள்ளாகிவிடுகிறார்.

 

அதிர்ச்சியின் விளைவாக வெளிப்படும் மூன்று முக்கிய அறிகுறிகள்.

அதிர்ச்சியை மீண்டும் அனுபவித்தல்

  • அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் அந்த நினைவு எழும்போதெல்லாம் மீண்டும் அந்தச் சம்பவத்தை அனுபவிப்பதைப் போன்ற உணர்வைப் பெறுகிறார். அத்தோடு அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய பயம், வேதனை, பீதி போன்ற உணர்வுகளை மீண்டும் அனுபவிப்பதைப் போல உணர்கிறார்கள். அதாவது அதிர்ச்சி ஏற்படுத்திய பாதிப்பானது ‘மீண்டும் அதே சம்பவம் அதே போல நிகழ்வது போன்ற அனுபவத்தை’ மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டவரின் மனத்தில் ஏற்படுத்துகிறது. மீண்டும் ஒரே விளையாட்டைப் பல தடவை விளையாடுவது என்ற வகையில் அதிர்ச்சியின் அறிகுறி பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் வெளிப்படுகிறது.

 

  • இதே நிகழ்வு பாதிக்கப்பட்டவர்களின் தூக்கத்தில் பயங்கரக் கனவாகவும் வெளிப்படலாம்; குழந்தைகளின் கனவில் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது போன்ற நிகழ்வோ அல்லது பூதமோ வெளிப்படலாம்.

 

  • சில சமயங்களில், காரணமே தெரியாத உணர்ச்சிக் கொந்தளிப்பாகச் சிலரிடம் எதிரொலிக்கலாம். பொதுவாகத் துக்கம், சோகம், வலி, வருத்தம், பயம் போன்ற உணர்வுகளாக, இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு இருக்கும்

 

தனிமை

  • மன இறுக்கத்தால் பாதிக்ப்பட்டவர், தன் குடும்பம், நண்பர்கள், சக பணியாளர்கள், ஆகியோரிடம் ஒட்டாமல் தனித்து இருக்கவே விரும்புவார்கள். ஒரு ஜடம் போல இயங்கிக் கொண்டிருப்பார்கள். தனக்கு நெருக்கமானவர்கள் தொடர்பான நிகழ்வுகளுக்குக் கூட இயல்பான உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள்.

 

  • அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர், அது போன்ற நினைவுகளை எழும்பும் எந்த ஒரு சிறு சம்பவத்தையும் தவிர்க்க முயற்சி செய்வார்கள். உதாரணத்திற்கு, போரினால் பாதிப்படைந்தவர் சீருடை அணிந்தவர்களைக் கண்டாலேயே கொதிப்படைந்துவிடுவார்கள்.
  • மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம், எதிர்காலத்தைப் பற்றிய இயல்பான கனவுகள் இருக்காது. எல்லோரைப் போல வேலை பார்க்க வேண்டும், திருமணம் செய்துகொள்ள வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும் போன்ற சிந்தனைகள் இருக்காது. எப்போதும் எதையோ தொலைத்தவர்கள் போல சந்தோஷமின்றிக் காணப்படுவார்கள்.

 

மிகை உணர்ச்சி வெளிப்பாடு

மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிலர் தொடர்ந்து அதிர்ச்சிக்கு உள்ளாகிக்கொண்டே இருப்பது போல் உணர்வார்கள். மனத்தைக் குவித்துப் பணியாற்றுவதிலோ அல்லது கவனம் செலுத்துவதிலோ அவர்களுக்குச் சிரமம் இருக்கும்; எளிதாக எரிச்சலடைவார்கள். பெரிய சுத்தம் எழுந்தால் தூக்கிவாரிப்போடும். சில சமயம் பீதியடைந்துவிடுவார்கள். அதிர்ச்சிக்குள்ளான நிகழ்ச்சியின்போது அனுபவித்த உணர்வுகளை மீண்டும் உணர்வார்கள். திடீரென்று பயங்கரமாக வியர்க்கும்; மூச்சுவிட சிரமப்படுவார்கள். தலைச்சுற்றலும் வாந்தியெடுக்கும் உணர்வும் இருப்பதாகக் கூறுவார்கள். மனஇறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடிக்கடி தலைவலியோ அல்லது வயிற்றுவலியோ இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஒரு மாதத்திற்கு மேல் காணப்படும். அதன் விளைவாக பணியிடத்திலும் சமூக வாழ்விலும் இடையூறுகள் ஏற்படும்.

 

மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட பலர், போதை மருந்துக்கும் குடிப் பழக்கத்திற்கும் அடிமையாகிவிடுகிறார்கள். அத்தோடு மனநிலை தொடர்பான பாதிப்புகள், மன உளைச்சல் ஆகியவை இருப்பதற்கான கீழ்க்கண்ட அறிகுறிகளும் அவர்களிடம் காணப்படும்

  • மனச்சோர்வு, உடலில் பலமின்மை, சோகம்
  • எரிச்சலடைதல், ஆக்ரோஷமாகக் காணப்படுதல், கோபம், வருத்தமடைதல்
  • நினைத்தது நடக்கவில்லை அல்லது எதிர்பார்ப்பது கிடைக்கவில்லை என்றால் உயிரோடு இருப்பதே குற்றம் என்கிற உணர்வு
  • எப்போதும் பயத்தோடும் பதற்றத்தோடும் காணப்படுதல்
  • தூக்கமின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம்
  • திடீரென்று அழுதல், சோகமாக் காட்சியளித்தல், நம்பிக்கையற்று இருத்தல

 

போன்றவைகளும் அதன் விளைவாக தற்கொலை எண்ணமும் இருத்தல்

எனவே, முதலில் மனஇறுக்கத்திற்கு ஆளான அறிகுறிகள் காணப்பட்டாலும், பின்னர் அதனால் முழுமையாகப் பாதிக்கப்பட்டுவிடுகிறார்.

 

மனஇறுக்கத்தால் பாதிக்கப்பட்டோர்

கடும் அதிர்ச்சியைச் சந்தித்தவர்கள் அல்லது அதிர்ச்சிக்கு உள்ளானவர்களில் 3% சதவீதத்திலிருந்து 58% சதவீதம் வரை மன இறுக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம், சில நிகழ்வுகள் மற்றதைவிடக் கடுமையாக இருப்பதுதான். போர்க்கைதிகள், குற்றவாளிகள், பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள், அரசியல் காரணங்களால் சித்திரவததைக்கு உள்ளானவர்கள் போன்றவர்களிடம் மன இறுக்கக் கோளாறு அதிக அளவில் காணப்படுகிறது.

 

மன இறுக்கத்திற்கான சிகிச்சை

மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பலவித சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றை உளவியல் சார்ந்த சிகிச்சை, மருத்துவ சிகிச்சை என்று இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். மனச்சோர்வு, பழைய துயர நினைவுகள் மீண்டும் வருதல், மிகை உணர்ச்சி வெளிப்பாடு ஆகிய மனச்சோர்வை நீக்கும் மருந்துகள் மனநிலையைச் சமன்படுத்தும் மருந்துகள், மனஉளைச்சலை போக்கும் மருந்துகள் போன்றவற்றைத் தந்து குணப்படுத்திவிடலாம். இத்தோடு மனஇறுக்கக் கோளாறின் தன்மைக்கு ஏற்ப மருந்துகளுடன், பல உளவியல் சார்ந்த சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

 

இந்தச் சிகிச்சைகளின் மூலம் பழைய நிகழ்ச்சிகளின் பாதிப்பு நிகழ்கால வாழ்க்கையைப் பாதிக்காதவாறு மாற்றுவதோடு மனக்கட்டுப்பாட்டையும், இவர்கள் மீண்டும் பெறுவார்கள். எவ்வளவு விரைவாகச் சிகிச்சை அளிக்கிறோமோ, அந்த அளவுக்கு மனஇறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர் நோயின் பாதிப்பிலிருந்து சீக்கிரம் விடுபடுவர். உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம், முற்றிய நிலையிலிருக்கும் மனஇறுக்கக் கோளாறுகளின் கடுமையான பாதிப்புகளிலிருந்து நிவாரணம் அடையலாம்.

 

மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர் தனக்குத் தானே எப்படி உதவிக்கொள்ளலாம்?

  • காலம்தான் உங்கள் துயரத்தை ஆற்ற முடியும். எனவே, மனக்காயம் ஆற உரிய அவகாசம் கொடுங்கள். நீங்கள் கடும் இழப்பினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
  • உங்கள் பலம் மற்றும் திறமை எதுவென்று அறிந்து, அதில் கவனம் செலுத்துங்கள்.
  • செய்ய வேண்டியனவற்றை வரிசைப்படுத்தி, முன்னுரிமை தந்து செயல்படுங்கள்.
  • தடைகளை மீறிச் சாதிக்கக் கூடிய சிறிய லட்சியங்களை வைத்துக்கொள்ளுங்கள்.
  • உடற்பயிற்சி செய்யுங்கள்; சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள்; உங்கள் மனக்காயத்தை இவை ஆற்றும்.
  • உடலில் சக்தியைச் சேமித்துவைக்கத் தேவையான அளவுக்கு ஓய்வெடுங்கள்.
  • நீங்கள்பட்ட வலியையும் வேதனையையும் உந்துசக்தியாகப் பயன்படுத்தி நிறைவேற்றப்படாத பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கப் பாடுபடுங்கள்.
  • எல்லோரிடமும் மனம்விட்டுப் பேசுங்கள்; மனந்திறந்து பேசுவதே உங்கள் நோயைக் குணப்படுத்திவிடும்.
  • உறவினர்களும் நண்பர்களும் தரும் ஆதரவை ஏற்றுக்கொள்ளுங்கள்.
  • போதை மருந்து, மது ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள். இவை உங்களுக்கு ஆறுதல் அளிப்பதற்குப் பதில் நோயை அதிகப்படுத்திவிடும்.

 

மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நீங்கள் எப்படி உதவ முடியும்?

  • மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு ஆறுதல் அளியுங்கள். நீங்கள் உண்மையாக காதுகொடுத்துக் கேட்பதுதான் முக்கியம்.
  • அவர்களுடன் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். நீங்கள் அவர்களுடன் இருப்பதற்கு ஈடு வேறு எதுவுமே இல்லை.
  • உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்; அவர்களிடம் இரக்கம் காட்டுங்கள். உங்கள் ஆதரவே, அவர்களுக்குப் பலத்தைத் தரும்.
  • ”நீங்கள் அதிர்ஷடம் செய்தவர்கள். அதனால் மோசமாகப் பாதிக்கப்படவில்லை” என்று தயவுசெய்து மனஇறுக்கத்தால் பாதிக்கப்பட்டவரிடம் கூறாதீர்கள். இதுபோன்ற வார்த்தைகளால் அவர்கள் ஆறுதல் அடையமாட்டார்கள்.
  • அதற்குப் பதிலாக, ”இப்படி ஒன்று நிகழ்ந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். என்னால் முடிந்ததை உங்களுக்குச் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று அவர்களிடம் கூறுங்கள்.
  • ‘தனித்து இருக்கவும் துயரை நினைத்து வருந்தவும் நினைக்கும்’ உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரின் தேவைக்கு மதிப்பளியுங்கள்

 

 

உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும்

உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம்   உளவியல் / மனநல ஆலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.

விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – தாழ்வுமனப்பாண்மை – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

[si-contact-form form=’1′]

==–==


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India